வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களை கடமை செய்ய விடாது தாக்கி காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேருக்கு வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் தண்டனை விதித்துள்ளது.
வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார சபை ஊழியர்கள் கடமையின் பொருட்டு சென்றிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் சிலரை தொடர்ச்சியாக கைது செய்திருந்த போதிலும் பிரதான சந்தேகநபரை கைது செய்திருக்கவில்லை. எனவே மின்சாரசபை ஊழியர்கள் பிரதான சந்தேக நபரை கைது செய்யுமாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் பிரதான சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்தார். பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.